அடித்து தூக்கும் எடப்பாடி கோஷ்டி! செயற்குழு, பொதுக்குழு 12 ஆம் தேதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
ஏட்டிக்கு போட்டியாக தினகரன் கோஷ்டியும், எடப்பாடி கோஷ்டியும், மாறி மாறி கட்சி நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்குவதும், அறிக்கைப்போர் நடத்துவதுமாக இவ்விரு அணிகளுக்கிடையே அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று பொது செயலாளரான சசிகலாவையும், துணை பொது செயலாளரான டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து முழுவதுமாக விலக்கி வைக்கப்போவதாக, இன்றைய எடப்பாடி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக, டிடிவி தினகரனோ பல அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளைப் பிடுங்கி, அதிரடி காட்டினார்.
அடுத்து டிடிவி தினகரன் என்ன செய்வார்? என்று தெரியாத நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்று பொதுக்குழுவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி, ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் என கட்சியின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அறிவித்துள்ளார்.
செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவின் செயற்குழு மற்றம் பொதுக்குழு கூட்டத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியானது முதலே செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கும் பணியில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு நிர்வாகிகளும், களத்தில் குதித்துள்ளனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொது செயலாளராக தேர்ந்டுக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் தினகரனை நிர்வாகிகளின் ஒப்புதலோடு கட்சியில் இருந்து முழுவதுமாக கட்டம் கட்ட எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த பதவி சண்டையில் எடப்பாடி - ஓபிஎஸ் அணி வெறி பெறுமா? அல்லது டிடிவி தினகரன் அணி வெற்றி பெறுமா? என்பது செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று மாலைக்குள் தெரியும்.