கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது.மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் தொடர்பாக திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மிக முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்தல், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? திமுக அரசு என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் தி.மு.க.வினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்?! அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய தி.மு.க. அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன?

அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது.மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.