AIADMK: இனி அதிமுக மெல்ல கரையும்.. ஒபிஎஸ், இபிஎஸ்க்கு இறுதி எச்சரிக்கை மணி அடிக்கும் ஜெ. உதவியாளர்.!
கழகத்தைவிட்டு யாரும் செல்லவில்லை என்று சொன்னாலும், கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். நான் சொல்வது உங்களை வேதனைப்படுத்த அல்ல.
கட்சி மாறினால் தவறில்லை என்னும் மனநிலைக்கு கழக நிர்வாகிகள் பலர் வந்துவிட்டனர் என்பதே நான் அறிந்த செய்தி. போகப் போகத் தெரியும், இந்த வார்த்தைகளின் உண்மை புரியும் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று முன்னோர்கள் எதற்குச் சொன்னார்களோ! அதற்காகக் காத்திருந்த நிர்வாகிகள் இனி மாற்றத்தை நோக்கி பயணத்தைத் தொடர இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்தி.
கழகத்தைவிட்டு யாரும் செல்லவில்லை என்று சொன்னாலும், கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். நான் சொல்வது உங்களை வேதனைப்படுத்த அல்ல.. வேகப்படுத்தவே! பிகில் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் 'குண்டம்மா', 'குண்டம்மா' என்று அழைப்பது அவரை கிண்டல் செய்வதற்காக என்று நினைத்தால் அவர் அறிவிலி, இல்லை உற்சாகப்படுத்தவே என்று நினைத்தால் அவர் அறிவாளி. உங்களை வேகப்படுத்தவே இந்த ஆலோசனைகள். நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் அனுபவத்தைப் பொறுத்தது.
உற்சாகப்படுத்த நிறைய வாய்ப்புகளை இறைவன் உங்களுக்கு வலிய வந்து தந்தாலும் நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்பது தொண்டர்களின் மனதை நெருப்பாய் சுட்டெரிக்கிறது. திருநாள் பரிசையும் விட்டுவிட்டீர்களே! எல்லோரும் இணைந்து எங்களை வளர்த்தக் கட்சியை காப்பாற்றுவோம், வலிமையாக்குவோம் என்று உறுதிமொழி எடுங்கள். ஒன்றுபட்டு தொண்டர்களின் கவலையைத் தீருங்கள். இல்லையென்றால் ஒவ்வொருவராக உங்களைவிட்டுச் செல்லும் போது நான் சொல்வதில் தவறில்லை என்பதை உணர்வீர்கள்.
சுதாரிப்பதற்கான நேரங்களைத் தவறவிட்டு ஆட்சியை இன்று இழந்துவிட்டீர்கள். இனியாவது சொல்வதைக் கேளுங்கள். கட்சி மாறினால் தவறில்லை என்னும் மனநிலைக்கு கழக நிர்வாகிகள் பலர் வந்துவிட்டனர் என்பதே நான் அறிந்த செய்தி. போகப் போகத் தெரியும், இந்த வார்த்தைகளின் உண்மை புரியும் என பூங்குன்றன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.