அதிமுக ஒரு பொதுவான கட்சி. இதனை இந்தளவுக்கு கொண்டுசென்றது வருத்தமளிக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம். 

ஓ.பன்னீர்செல்வம் அவராகவே ராஜினாமா செய்துவிட்டார், இல்லையெனில் அவரை தான் முதல்வராக்கிவிட்டு போயிருப்பேன் என சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பின்னர், சசிகலாவுடன் உரையாடிய அதிமுக.,வினரை நீக்க உத்தரவு வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர், சிவநேசனிடம், இன்று சசிகலா தொலைபேசியில் பேசினார். 

அப்போது ‘’என்னை பொறுத்தவரையில், கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். தொண்டர்கள் எல்லாரும் நான் வந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் என வருத்தப்படுகிறார்கள். கட்சியில் இருப்பவர்களை நீக்கிக்கொண்டே சென்றால் எதிர்க்கட்சியாக எப்படி எடுத்து செல்லவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஓபிஎஸ் அவராகவே விலகிவிட்டார். இல்லையெனில் அவரை தான் முதல்வராக்கிவிட்டு போயிருப்பேன். இப்போது கட்சியில் ஜாதி ரீதியாக போய்கொண்டிருக்கிறார்கள் என பலரும் கூறி வருந்துகின்றனர். அதிமுக ஒரு பொதுவான கட்சி. இதனை இந்தளவுக்கு கொண்டுசென்றது வருத்தமளிக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்.

கட்சியை நல்லபடியாக சரிசெய்து ஜெயலலிதா சொன்ன மாதிரி 100 ஆண்டுகள் ஆனாலும், அதிமுக ஆட்சி தான் என்பதை நிலைநாட்டிக் காட்டவேண்டும். அக்கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் வெற்றிப்பெறட்டும் என்று தான் நான் ஒதுங்கியிருந்தேன். ஆனால், தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருப்பதால் எப்படி சும்மா இருக்க முடியும். இதனால், தொண்டர்களை சந்திக்க வருவதாக கூறியுள்ளேன். கட்சியில் ஒருசிலரின் சுயநலத்திற்காக தொண்டர்களை பலியாக்குவதா? இதுதான் கட்சியை நடத்துவதற்கு அழகா? விசுவாசமாக உழைத்த தொண்டர்களை நீக்கியது தவறு.

என்னை முதுகில் குத்தினார்கள், தொண்டர்களையும் நீக்க ஆரம்பித்துள்ளதால், வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார முடியாது. எனவே, தொண்டர்கள் நினைப்பதை செய்துக்காட்ட வேண்டும். எனக்கென யாரும் இல்லை, தொண்டர்களுடனே கடைசிவரை இருந்துவிடுகிறேன். கட்சியை காப்பாற்ற உறுதியாக வருவேன். நிச்சயம் நல்லது நடக்கும் கவலைப்படாதீர்கள். ஊரடங்கு முடிந்ததும் அனைவரையும் சந்திக்கிறேன்’’ எனப்பேசியுள்ளார்.