தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மட்டும் தனியாக 140 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்தது. இந்தத் தேர்தலில் சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் கோவில்பட்டியில் நீர், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கடம்பூர் ராஜூ கூறுகையில், “நாங்கள் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டோம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை இரண்டு பேரும் (ஓபிஎஸ்-ஈபிஎஸ்) கையெழுத்திட்டுத்தான் அறிவித்தனர். அதிமுகவில் ஒற்றை தலைமை என்பதைவிட இரட்டை தலைமை என்பது கூடுதல் பலமே. எங்களுக்கும் இப்போது இரட்டை தலைமை பழகிவிட்டது. இனியும் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மட்டும் தனியாக 140 தொகுதிகளில் வெற்றிபெறும். அதிமுக கூட்டணி மொத்தமாக சேர்த்து 190 தொகுதிகளில் வெற்றிபெறும்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred