அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 18 தொகுதிகள்..? சின்னம்மா பாவம்... உருகும் ஓ.பி.எஸ்... மருகும் எடப்பாடி..!
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்தித்தால் 3வது முறையாக ஆட்சி அமைக்கலாம் என்பது அக்கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரையிலான கருத்தாக இருக்கிறது.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்தித்தால் 3வது முறையாக ஆட்சி அமைக்கலாம் என்பது அக்கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரையிலான கருத்தாக இருக்கிறது.
சசிகலா விவகாரத்தில் அமைதியாக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தினருடன் இது குறித்து விவாதித்து இருக்கிறார். அப்போது, ‘’சசிகலா குடும்பம் நான் வகித்த முதல்வர் பதவியை பறிக்க என்னை நடத்திய விதம் என்னை சங்கடப்படுத்துகிறது. சொல்லொனாத்துயரத்தில் இருந்ததால்தான் நான் அம்மாவின் நினைவிடத்திற்கு சென்று தர்மயுத்தம் நடத்தினேன்.
அப்போதைய மனநிலையில் அதனைத் தவிர்க்க இயலவில்லை. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன். அம்மாவின் ஆட்சி கவிழக்கூடாது என்கிற எண்ணமும் அதில் இருந்தது. ஆனால், இணைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது தோழமை அமைச்சர்களும் என்னை நடத்தியவிதம் காயப்படுத்தியது. என்னை கண்டுகொள்ளாமல் அவர்களாகவே முடிவுகளை எடுக்க ஆரம்பித்தனர். கட்சிக்குள் என்னை நம்பி வந்தவர்களை ஒதுக்கி வைத்தனர். அட அதைவிட கொடுமையாக எனது ஆதரவாளர்களையே எடப்பாடி ஆதரவாளராக மாற்றிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட என்னை ஒதுக்கியே வைத்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான். ஆனால் என்னிடம் கூறாமலே எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருண்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். எனது பிரச்சாரம் குறித்து அவர்கள் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தும் கட்சியின் நலம் கருதியே பொறுமை காத்து வருகிறேன். சசிகலா நடத்திய விதமும், எடப்பாடி பழனிசாமி என்னை நடத்திய விதமும் அந்தந்த நேரத்து அரசியல் நியாயமாக இருந்துவிட்டுப்போகட்டும். அதற்காக அதிமுக வீழ்ந்து விடக்கூடாது. ஆகையால் கசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து அதிமுக வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்’’என மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பாஜகவிடமும் இதனை அவர் எடுத்துக் கூறியிருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் மூலமாக சசிகலா தரப்பை இணைத்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கச் சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடியாரின் எண்ணம் வேறு மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். சசிகலாவை இணைத்துக் கொண்டால் தென்மாவட்டங்களில் மட்டும் முக்குலத்தோர் வாக்குகள் சிறிதளவு கிடைக்கும். அதனை முத்தரையர் மாநாடு, தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு ஆகியவை மூலம் சரிக்கட்டி அந்த சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று ஈடு செய்து விடலாம் என்கிற திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், சசிகலா தரப்பை இணைத்துக் கொள்ளலாமா என்பதில் இரு மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறுகிறார்கள்.
அதாவது சசிகலா தரப்பு தங்களுக்கு ஆட்சி அதிகாரம் எதுவும் வேண்டாம். இப்போது வரை எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கினால் போதும் என தூது விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது 45 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி விடுங்கள் எனவும் சசிகலா தரப்பு கேட்டு இருக்கிறது. அதற்கு அதிமுக தலைமை சம்மதிக்காததால் 18 சீட்டுக்களாவது கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தான் சமீபத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியானதில், அதிமுகவில் இருந்து வெற்றிபெற்று அமமுகவுக்கு சென்று பதவியிழந்த எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிபெற்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இடம்பெறவில்லை என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்குகிறவர்கள்.
தங்களை நம்பி வந்து பதவியை இழந்து தற்போது வரை தங்களோடு இருப்பவர்களை அவர்கள் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் வேட்பாளராக்க நினைக்கிறாராம் சசிகலா. பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.