தமிழக முதல்வரை பிரதமர் மோடி மதிப்பதில்லை! அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு
மெரினாவில் போராட்டம் நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி தரலாம் என உத்தரவிட்டனர்.
90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்த நிலையில், ஒரே ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கலாம் என்று மனுவில் தெரிவித்திருந்தார். இது கோடைக்காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் இடம் மெரினா என்பதாலும், 90 நாட்கள் உண்ணாவிரதம் என்பது போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்றும் கூறி ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் உத்தரவிட்டும கூட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு, தமிழகத்தை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது. மீத்தேன், ஹைடரோ கார்பனுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தாலும் சரி, ராணுவமே வந்தாலும் சரி, துப்பாக்கிச்சூடுக்கு பயப்படமாட்டோம்; செத்தாலும் சாவோம் என்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
எங்கள் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக உள்ளன. மாணவர்கள், இளைஞர்களும் ஆதரவாக உள்ளனர். எங்களின் போராட்டம் மெரினாவில்தான் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.
காவல்துறை அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மெரினாவில் மே 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.