பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும் ஆலோசித்து ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்கான தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் 5ம் தேதி நடைப்பெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வரும் 5ம்தேதி மாலை 5 மணியளவில் நடைப்பெறும் கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பின்பு, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 18ம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நிதி நிலை தாக்கல் செய்த மறு நாள் அதாவது 19ம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையையும் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் வரும் 5ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைப்பெறுகிறது. இந்த கூட்டத்தில், பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும் ஆலோசித்து ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
