விவசாய சீர்திருத்த சட்டங்கள் ஒரே இரவில் எடுத்ததல்ல... எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை..!
மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய பிரதேச விவசாயிகளிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ’’எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இதேபோன்ற விவசாய சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்தன. விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம். இந்தியாவின் விவசாயம் மற்றும் இந்தியாவின் விவசாயி இனி பின்தங்கிய நிலையில் இருக்க விடமாட்டோம். விவசாயி எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பழங்கள், காய்கறிகள், தானியங்களை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், அவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில், எங்கள் அரசாங்கம் விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அறிக்கையில் விவசாய சீர்திருத்தங்களைப் பற்றி பேசிய அரசியல் கட்சிகளிடமிருந்து பதில்களைத் தேட வேண்டும்.
இந்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் ஒரே இரவில் வரவில்லை. ஒவ்வொரு அரசாங்கமும் கடந்த 20-22 ஆண்டுகளாக இது குறித்து விரிவாக விவாதித்துள்ளது. கடந்த 20-30 ஆண்டுகளில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இந்த சீர்திருத்தங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டன. விவசாய வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் சீர்திருத்தங்களை கோருகின்றனர். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையில் உள்ள சீர்திருத்தங்களை எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளன. அவர்கள் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. நாங்கள் அதன் பரிந்துரைகளை அமல்படுத்தினோம், எம்.எஸ்.பி.க்கு ஒன்றரை மடங்கு வருமானத்தை விவசாயிகளுக்கு வழங்கினோம்.
நாங்கள் எம்எஸ்பியை அகற்ற வேண்டுமானால், நாங்கள் ஏன் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துகிறோம்? எம்எஸ்பி குறித்து எங்கள் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் விதைப்பதற்கு முன்பு அதை அறிவிக்கிறோம். இது விவசாயிகளுக்கு கணக்கீடுகளை எளிதாக்குகிறது”என்று அவர் தெரிவித்தார்.