கோவையில் மீண்டும் மு.க. ஸ்டாலினை விமர்சித்து ‘மொட்டை’ போஸ்டர்கள்... திமுகவினர் கொந்தளிப்பு..!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து கோவை நகரில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழந்தும் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போஸ்டர் யார் அச்சடித்தது, அச்சகத்தின் பெயர் என எதுவும் இல்லாமல் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு திமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. இதுதொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், “இதைவிட எங்களுக்கும் அழகாக போஸ்டர்கள் ஒட்ட எங்களுக்கும் தெரியும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கோவை நகரில் மு.க. ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவர் தேவையா..? விக் மாட்டியவர என்று கிண்டலாக எழுதபட்டு புகைப்படட்துடன் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களையும் அச்சடித்தவர்கள் யார், அச்சகம் யார் என எதுவும் தெரியவில்லை.
இந்த போஸ்டர்களைக் கண்ட திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டரை திமுகவினர் கிழிந்தெறிந்தனர். இதனால், கோவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.