after MGR Jayalalitha no actors can ruled tamilnadu - MC Sambath

கடலூர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகர்கள் யாரும் நாட்டை ஆள முடியாது என்று கடலூரில் நடந்த காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் 'காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்' பாதிரிக்குப்பத்தில் நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு கடலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் குமரன் வரவேற்றார்.

இதில், ஊராட்சி செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் ரவி, ராதிகா ஜெயபால், மாவட்ட பிரதிநிதி கிருபாகரன், கிளை செயலாளர் முருகையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வசந்தா முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அமைச்சர் எம்.சி.சம்பத், "காவிரி விவகாரத்தில் தி.மு.க. செய்யாததை அ.தி.மு.க. செய்து காட்டியுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தினார். அதன்பிறகே காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, காவிரி தண்ணீரை பெற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. விவசாயிகள் நலன் காக்கவில்லை. 

எம்.ஜி.ஆர். தான் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை பெற்று தந்தார். தற்போது அ.தி.மு.க. எடுத்த முயற்சியால் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

தமிழகமும், கேரளாவும் இதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு உறுப்பினரை நியமிக்கவில்லை. எனினும், காவிரி தண்ணீரை பெற்று தர இந்த ஆணையம், ஒழுங்காற்று குழு உரிய நடவடிக்கை எடுக்கும். இது அ.தி.மு.க.வின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. 

பல்வேறு காலக் கட்டங்களில் காவிரி உரிமையை மீட்டு எடுக்க ஜெயலலிதா தொடர்ந்து போராடினார். அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகின்றனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகர்கள் யாரும் நாட்டை ஆள முடியாது. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்கள் காணாமல் போய் விடுவார்கள். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது. 

தினகரன் அணி எந்த தேர்தலில் நின்றாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். எங்களுக்குள் சிறு, சிறு பிரச்சனை இருந்தாலும், அது சரியாகி விடும். 

எந்த சூழ்நிலை வந்தாலும், உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் நாங்கள் இரட்டை இலை சின்னம் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் களம் காண்போம்" என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட இணை செயலாளர் செந்தாமரை, மாவட்ட துணை செயலாளர் தவமணி சக்கரவர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பெருமாள்ராஜா, 

மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முருகையன், துணை தலைவர் ஜெயபால், நகர துணை செயலாளர் கந்தன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, 

மாவட்ட நிர்வாகி சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் லதா சுகுமார், முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மதிவாணன் நன்றி தெரிவித்தார்.