தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை...!
இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகியுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. மே 3ம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா அதிகரித்து வந்ததால் தேதி குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாணவர்களின் நலனைக் கருத்திக் கொண்டு பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறையில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 50 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். ஆனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.