அனிதா தற்கொலை எதிரொலி - தமிழகம் முழுவதும் வெடிக்கிறது போராட்டம்...!
அனிதா தற்கொலை செய்ததையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார்.
இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சென்னை அண்ணாசாலையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் மாணவர்கள் அமைப்பு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், மதுரை, அரியலூர், திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டம் வெடித்து வருகிறது.