நிர்மலா தேவிக்கு மே 9 ஆம் தேதி வரை காவல்! சாத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் நிர்மலா தேவி இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வரும் 9 ஆம் தேதி வரை காவல் விதித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த 16 ஆம் தேதி மாணவிகளிடம் செல்ஃபோனில் பேசி தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவியிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது நிர்மலா தேவி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தியதில், தன்னை செல்போனில் பேச தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிடிரயர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர்களது பெயர்களை கூறினார். இதனை அடுத்து, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் பிடிபட்டார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, நிர்மலா தேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து முருகன் கைது செய்யப்பட்டார். பல்வேறு பிரிவுகளின்கீழ் முருகன் கைது செய்யப்பட்டார். இதனிடையே தலைமறைவாக இருந்த மற்றொரு பேராசிரியர் கருப்பசாமி, மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 5 நாட்களாக காவலில் இருந்த பேராசிரியர் நிர்மலா தேவி, சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாட்கள் சிபிடிசஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் இன்று நிர்மலா தேவி ஆஜரானார். ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவிக்கு சாத்தூர் நீதிமன்றம் மீண்டும் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.