Pongal Gift: மரத்தூளை மஞ்சள்தூளாக வழங்கிய கோபாலபுர அரசு.. வெளியே விளம்பரம்.. உள்ளே கலப்படம்.. அண்ணாமலை விளாசல்
உருகும் வெல்லம், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளது இந்த கோபாலபுர அரசு என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்து வரும் நிலையில் திமுக ஆட்சியைப் போலவே வெளியே விளம்பரம் உள்ளே கலப்படம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், சீரகம், மிளகு, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் 31ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு எப்போது வழங்கப்பட்டதோ அப்போதிலிருந்து திமுக அரசு மீது பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக புளி பாக்கெட்டில் பல்லி, ஒன்றுக்கும் உதவாத உருகும் வெல்லம், அரிசி, ரவையில் வண்டுகள் இருப்பதாக குமுறுகின்றனர். அதேபோல், எதிர்க்கட்சிகள் பொங்கல் தொகுப்பை தமிழகத்தில் கொள்முதல் செய்யாமல் வட மாநிலத்தில் கொள்முதல் செய்ததது ஏன்? இதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு என்று பாக்கெட் செய்து கொடுத்துள்ளனராம். அதேமாதிரி மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம் செய்துள்ளனர். ”அரசு கொடுக்கும் பொருட்களை வாங்குபவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா? கொரோனா வந்து சாவதை போல, அரசின் இந்த பொங்கல் தொகுப்பை வாங்கி சமைத்தாலும் செத்துவிடுவோம்” என்று காட்டமாக கூறுகின்றனர். இந்நிலையில், உருகும் வெல்லம், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளது இந்த கோபாலபுர அரசு என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உருகும் வெல்லம், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளது இந்த கோபாலபுர அரசு.
இப்பொழுது நடக்கும் ஆட்சியைப் போலவே வெளியே விளம்பரம் உள்ளே கலப்படம் என்று பொங்கல் பரிசும் அமைந்துள்ளது. மக்கள் பணியிலும் சற்று ஆர்வத்தை காட்டுங்கள் என அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.