உற்சாகத்துடன் இடைத் தேர்தல் களம் இறங்கும் அதிமுக… 4 தொகுதிகளுக்கு விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு !!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக.அறிவித்துள்ளது
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், , ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று அத்தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்தது.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அதிமுக சார்பில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை 25,000 ரூபாய் செலுத்திப் பெற வேண்டுமென்றும், அன்றைய தினமே பூர்த்தி செய்து அதனைத் திரும்ப வழங்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று மாலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், நான்கு தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த முடிந்த 39 நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையால் குஷியாகியுள்ள அதிமுக தற்போது மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இத் தேர்தலில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.