10 வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்யபோகிறார்கள் என்று அதிமுகவை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.  

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுயில் அதிமுகவினர் வாக்குக்கு பணம் அளிக்கிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஜெயலலிதாவின் மரணத்தை ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்துகிறார். அவருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆணையத்தை அமைத்து, அதை விசாரிப்பது அதிமுகதான். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் உண்மை வெளிவரவில்லை. அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா இரும்புப்பெண் என அதிமுகவினர் பெருமையாக பேசுகின்றனர். ஆனால், திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக அவர் இறந்துவிட்டாரா என்ன? அதிமுக அமைத்துள்ள கூட்டணி முரண்பாடு நிறைந்தது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி அது.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அதிமுகவின் அறிவிப்பை ஏற்க முடியாது என பாஜக மறுத்துவிட்டது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் அதிமுகதான் இருக்கிறது. இத்தனை வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து செய்யபோகிறார்கள்?” என்று உதயநிதி தெரிவித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred