தினகரன் கட்சியில் கொத்துக் கொத்தாக சேரும் கோவை, நீலகிரி அ.தி.மு.க நிர்வாகிகள்! அதிர்ச்சியில் ஆளும் கட்சி!
தடாலடியாக தினகரன் அணியை நோக்கி அ.தி.மு.க. நிர்வாகிகள் படையெடுக்க துவங்கியிருப்பதால் பதற்றத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். வட்டாரம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு நெருங்கும் நிலையில், மளமளவென நிர்வாகிகளை தன் கட்சிக்குள் இழுக்கும் வேலையை துவங்கியிருக்கிறார் தினகரன். இதற்கு கை மேல் பலன் பக்காவாக கிடைத்து வருகிறது.
பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தியபோது அவரது வலது கரமாக செயல்பட்டவர்களில் ஒருவர் மாஜி வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன். பன்னீரின் கரங்களை வலுப்படுத்துவதற்காக கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியடித்து உழைத்தார். ஆனால் அணிகள் இணைந்த பிறகு அவருக்கான உரிய மரியாதையை பன்னீர் பெற்றுத்தரவில்லை.
இச்சூழலில், சமீபத்தில் கொடுக்கப்பட்ட விவசாய அணி மாநில இணை செயலாளர் பதவியை தனக்கான அவமானமாக சொல்லி அ.தி.மு.க.விலிருந்து வெளியேறி அ.ம.மு.க.வில் இணைந்துவிட்டார். இணைந்த கையோடு பன்னீர் மற்றும் எடப்பாடியார் இருவரையும் வறுத்தெடுத்தார்.
தான் இணைந்தது மட்டுமில்லாமல் தமிழகத்தின் கோயமுத்தூர் மண்டல மாவட்டங்கள் பலவற்றில் இருந்து முக்கிய நிர்வாகிகள், சிறப்பான பேச்சாளர்கள், கில்லி களப்பணியாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகளை இழுத்துக் கொண்டிருக்கிறார். அடாவடித்தனமில்லாத நிர்வாகி! என ஜெயலலிதாவிடமே பெயர் பெற்று வைத்திருந்தவர் தாமோதரன். எனவே அவர் மீது அ.தி.மு.க.வினருக்கு நல்ல நம்பிக்கை இருப்பதால் ‘இவர் சொல்வதை கேட்டு அணி மாறலாம்’ என்று பலர் நினைக்க துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர் அணி மாற டபுள் ஓ.கே. சொல்லிவிட்டனராம். இதில் வழக்கறிஞர்கள் கணிசமானவர்கள்! என்கிறார்கள். அதுமட்டுமில்லை, மகளிர் அணி நிர்வாகிகள் பலரும் பல்க்காக அணி மாறுகிறார்களாம்.
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படியாக இருந்தாலும் இந்த மாற்றம் உறுதி! என்கிறார்கள். காரணம், அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தினகரனைத்தான் நம்புகிறார்கள்! அவரால் மட்டுமே கட்சியை கட்டுக்கோப்பாகவும், ஜெயலலிதா போல் தைரியமாகவும் நடத்திட முடியும்!
தினகரன் அணியை வலுப்படுத்தினால் அடுத்த தேர்தலிலும் நிச்சயம் அ.தி.மு.க. வெல்லும்! என்று தொடர்ந்து பேசி, பெரும் நம்பிக்கையை அவ்வணியிலிருப்போர் உருவாக்கி வைத்திருப்பதுதான்.
மளமளவென மாஸ் மாற்றங்கள் நிகழ்வது உறுதி! என்று உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்திருப்பதால், கடும் அதிர்ச்சியிலிருக்கிறது ஆளும் அணி.