சசிகலா இணைப்பு தொடர்பாக தேனி மாவட்ட அதிமுக சார்பாக நாளை நடைபெற இருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது  

சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்ததா? என்று பார்த்தால் எதிரொலிக்கவில்லையென்றே தெரிகிறது. அதிமுக தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என அதிமுகவில் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுகவில் சசிகலா தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பெரும்பாலும் எதிர்ப்பே ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


தேனியில் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மட்டும் கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செம்மலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை(மார்ச் 5) தேனி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி சசிகலா இணைப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதில் இருந்து பெரிய அளவிலான ஆதரவு கிடைக்காத காரணத்தால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. . இது தொடர்பான அறிவிப்பை தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் வெளியிட்டுள்ளார். எனவே அதிமுகவினர் முழுமையாக ஏற்று க்கொண்டால் மட்டுமே அதிமுகவில் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக- அமமுக மீண்டும் இணைவது கேள்வி குறியாக மாறியுள்ளது.