ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்துள்ளது. இதில், சசிகலா தரப்பை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை நிரூபிரத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், எதிர்க்கட்சியினரை வெளியேற்றும்படி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது, எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை , சட்டமன்ற பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த நிர்வாகிகள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டனர். அங்கு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கும்படி கூறி, மனு அளித்தனர். மேலும், பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும், அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
இதைதொடர்ந்து இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகை சென்றார். அங்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உத்தரவிட்டதற்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வைகையில், கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அங்கு ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு நடந்த்து. அதனை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என வலியுறுத்தினார்.
அவருடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் மைத்ரேயன், மாபா பாண்டியராஜன் ஆகியோர் சென்றனர்.
பின்னர், மாபா முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செயதியாளர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சியினரை சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம்.
மேலும் இந்த அரசு முறையான அதிமுக அரசு இல்லை. பொதுமக்களின் ஆதரவு பெறாத இந்த அரசின் நிலை இன்னும் சில நாட்களில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
