18 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற்று, மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேர்த்திக்கடன் செலுத்தியும், சிறப்பு வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி உள்ளிட்ட பலர், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கோயில் மண் சோறு சாப்பிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல், சென்னை வடபழனி முருகன் கோயிலில், அதிமுக பிரமுகர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை விராச்சிலை அடைக்காத்த அம்மன் கோயிலில் மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலாலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். அப்போது ஆயிரத்து எட்டு தேங்காய் உடைத்து அவர்கள் வழிபட்டனர். அப்போது அவர்கள், அம்மாவைக் காப்பாற்று கடவுளே என சத்தமிட்டு வழிபட்டனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் திருத்தலத்தில், சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
