அதிமுகவில் அதிகரிக்கும் ஸ்லீப்பர் செல்கள்... சுயேட்சையாக போட்டியிட்டு அதிர்ச்சி கொடுக்கும் ர.ர.க்கள்..!
பெருந்துறையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். சேந்தமங்கலம், மதுரையிலும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் சுயேட்சையாக களமிறங்குவதால் கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் வெற்றி பெற்றபோது ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட சீட்டு கேட்டிருந்தார். ஆனால், அதிமுக தலைமை அவருக்கு சீட்டு வழங்கவில்லை. அந்தத் தொகுதிக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமாரை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது.
இதனால், தோப்பு வெங்கடாச்சலம் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர் பேட்டி அளித்தபோது கதறியழுத சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்திவந்தார். கடந்த 10 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதியில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளதால் பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்; எனவே சுயேச்சையாகப் போட்டியிடுங்கள் என்று அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறையில் சுயேட்சையாகப் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளார். அவர் இன்று சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இதேபோல நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதியில் சீட்டு கிடைக்காத சிட்டிங் எம்.எம்.ஏ. சந்திரசேகரன் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மதுரையில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்கள் பலர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளாதாக அறிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக அதிமுகவினர் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்திருப்பதால் அக்கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.