admk mla ready to join with dmk

எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும், ஆட்சி என்பது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை, இதுவரை யாராலும் யூகிக்க முடியவில்லை.

பன்னீர் அணி தனியாக பிரிந்து சென்ற பின்னர், தற்போது, எடப்பாடி அணி, தினகரன் அணி, நடுநிலையாளர் அணி என்று அதிமுகவில் மூன்று அணிகள் இயங்கி வருகின்றன.

இதில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனாலும், எஞ்சிய நான்காண்டு பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் அதை வெளியில் காட்டி கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கினால், மீண்டும் அடிமைகளாக மாற வேண்டிய நிலை வரும் என்று, நடுநிலையாக இருக்கும் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்கள் நினைக்கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், பன்னீர் முதலமைச்சராக இருந்தபோது, 30 க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள், திமுகவிற்கு வர தயாராக இருந்தனர்.

அப்போது, அவர்கள் 5 அமைச்சர்கள், மற்றும் சில வாரிய பொறுப்புக்களை மட்டுமே கோரிக்கையாக முன் வைத்தனர். ஆனால், ஸ்டாலின் அதை ஏற்கவில்லை. மேலும், அதிமுகவை உடைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக இருக்க கூடாது என்றும் அவர் நினைத்தார்.

ஆனால், தற்போதுள்ள நிலையில், தினகரன்-எடப்பாடி மோதலில் எந்நேரம் வேண்டுமானாலும், ஆட்சி கவிழும் நிலை வரலாம் என்ற அச்சத்தில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் பலர் உழன்று வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ க்களை பெற்றுள்ள திமுக, இந்த நேரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நேரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கொஞ்சம் சாதுர்யமாக காய் நகர்த்தினால், தங்கள் பக்கம் திரும்ப தயாராக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ க்களை வளைத்து பிடித்து, எஞ்சிய நான்கு ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள முன்வருவாரா? என்பதே அரசியல் நோக்கர்கள் தற்போதைய கேள்வியாக உள்ளது.