ஜெயலலிதா உங்க பாட்டி! எம்.ஜி.ஆர். உங்க தாத்தா!: ஆளுங்கட்சியை அலற வைக்கும் அமைச்சர்!
இப்போதுள்ள மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பற்றி சரி வர தெரியவில்லை. அவர், மாணவர்களான உங்களுக்கு தாத்தா. முன்னால் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கெல்லாம் பாட்டி. அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
*உதயநிதியின் டெல்லி விசிட்டின் போது நானும் உடனிருந்தேன். பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்னதோடு, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் பல விஷயங்களைக் கேட்டறிந்தார் உதய். இந்த டெல்லி விசிட் நிச்சயம் அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதி. ஆனால் அவர் எம்.பி.யாவாரா இல்லையா? என்பதை தலைவரே முடிவு செய்வார்.
- துரை (தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர்)
*டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் போராட்ட மாணவர்களை சந்தித்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார் நடிகை தீபிகா படுகோனே. போனது மட்டுமில்லாமல் போய் வந்து கொஞ்சம் ஓவராய் பேசினாராம். இது அரசியல் உச்ச மையத்தினை கடுப்பாக்கியது. இந்நிலையில், அவரது புதிய படம் பல கோடிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் அவரை பிராண்ட் அம்பாசிடராக புக் பண்ணியிருந்த தனியார் நிறுவனங்களும் கழட்டி விட்டுள்ளன.
-பத்திரிக்கை செய்தி.
* தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இருவருக்குமான மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பானது சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. இதன் பின்னணியில் தமிழக முதல்வர் இருப்பதாக இரு தரப்பும் நினைக்கிறதாம். அதிலும் பன்னீர் தரப்புதான் இதை டெல்லி வரை ஓவராக குடைந்தெடுத்து, காரணத்தை கண்டறிந்துள்ளதாம்.
-பத்திரிக்கை செய்தி
*ஜம்மு - காஷ்மீர் நிலைமை சீராக உள்ளதாக மத்தியமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அப்படியானால் எத்றகாக முப்பத்தாறு மத்திய அமைச்சர்களை அங்கு அனுப்புகிறார்கள்? அவர்கள் அங்கு சென்று வந்து மத்திய அரசுக்கு ஆதரவாகத்தானே பேசுவார்கள்? உங்களுக்கு எதிரானவர்களை அனுப்பினால்தானே உண்மை நிலவரம் வெளியே வரும்?
- கபில் சிபல் (காங்கிரஸ் முக்கிய நிர்வாகி)
*டெல்லியில் 1984ல் நடந்த கலவரம், சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை! என்றும், அதை செய்தார்களை காங்கிரஸ் அரசு பாதுகாத்து வந்தது! என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் முதல், சாம் பிட்ரோடா வரை, இந்த கலவரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். -பிரகாஷ் ஜவடேகர் (மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்)
*தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை, தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்! என முதல்வர் இ.பி.எஸ். அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க. நடத்தும். -மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)
*காலம் கெட்டுப் போச்சு! சமுதாயம் கெட்டுப் போச்சு! அரசியல் கெட்டுப் போச்சு! எனவே ஊடகங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன. எது உண்மையோ, அதை மட்டும் ஊடகங்கள் சொல்ல வேண்டும். -ரஜினிகாந்த் (நடிகர்)
*மாணவ பருவத்தில் கேள்விகள் பல கேட்க வேண்டும். அப்போதுதான் ஞானம் உண்டாகும். கேட்பதை விட படிப்பதை விட, செய்யும் செயல்தான் மிக முக்கியமானது. அது சிறப்பாக இருக்க வேணுடும். -ஓ.எஸ்.மணியன் (ஜவுளித்துறை அமைச்சர்)
*முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. இப்போதைய பிரதமர் மோடி முயற்சியால்தான், தமிழகத்தில் எந்த தங்குதடையுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. -எச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலர்)
* இப்போதுள்ள மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பற்றி சரி வர தெரியவில்லை. அவர், மாணவர்களான உங்களுக்கு தாத்தா. முன்னால் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கெல்லாம் பாட்டி. அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். நல்ல பேரை வாங்க வேண்டும்! என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியவர் எம்.ஜி.ஆர்.
-திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)
- விஷ்ணுப்ரியா.