இரு அணிகள் இணைவதற்கான நேரம் கனிந்து வந்துள்ளது….மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் வைத்திலிங்கம் பேட்டி…
அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு இரு அணிகளும் மீண்டும் இணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடந்து அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் விரைவில் பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் எம்.பி.,அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார்,தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் 15 மாட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைனத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மா அணியின் இணைப்புக் குழு தலைவர் வைத்திலிங்கம், இரு அணிகளும் இணைவதற்கான நேரம் களிந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் இரு அணியினரும் சந்தித்துப் பேச உள்ளதாகவும் வைத்திலிங்கம் கூறினார்.