அதிமுக எடுக்குற முடிவு நமக்கு சாதகமாகத்தான்யா இருக்கு!! குதூகலிக்கும் மோடி - அமித் ஷா
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போவதற்கு அதிமுக காரணமாக திகழ்கிறது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்குதேசம், மத்திய பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பாஜக பெரும்பான்மையை நிரூபித்துவிடும் என்றபோதிலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆந்திர கட்சிகள் போராடுகின்றன. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே அதிமுகவின் அமளி, ஒருவகையில் மத்திய பாஜக அரசிற்கு சாதகமாகவே உள்ளது. பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து அரசை காப்பாற்றுவதற்கான நாடகம்தான், அதிமுக எம்பிக்களின் அமளியா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
ஆக மொத்தத்தில் எது எப்படியோ? அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு என பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.