கொரோனா தடுப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னிலை மாநிலம் என  பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு செயல்பட்டுள்ளோம். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என ஐந்துமுனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை தாம்பரம் தொகுதியில் போட்டியியும் டி.கே.எம். சின்னையாவையும், ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் வளர்மதியையும் ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகளிருக்காக ஆரம்பித்து வைத்த தாலிக்கு தங்கம் திட்டத்தில் இருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் வரை பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, ஸ்டாலினிடம் கேட்கிறேன் 96 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்தீர்கள், 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது ஏதாவது மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்களா? என்றால் அப்படி எதுவும் இல்லை. ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கினார். 

கொரோனா தடுப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னிலை மாநிலம் என பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு செயல்பட்டுள்ளோம். ஆனால் அப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஸ்டாலின் செய்தது என்ன?. ஒன்றுமில்லை. தஞ்சை மண்ணின் மைந்தர்கள் என பெருமை பேசிக்கொள்ளும் நீங்கள் காவிரி நீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்ப்பு கிடைத்த பிறகும் 7 ஆண்டுகள் அமைதியாக இருந்தார்கள். ஜெயலலிதா தான் போராடி நீதி பெற்றுத்தந்தார். மீத்தேன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விளை நிலங்களை காப்பதற்காக நம்முடை முதலமைச்சர் டெல்டா பகுதிகளை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள். அதுதான் நல்லாரசுக்கு ஒரு சிறந்த உதாரணம். 2006ல் திமுக ஆட்சி காலத்தில் தான் கடும் மின் தட்டுப்பாடு நிலவியது. கையாலாகாத ஆட்சியாக தான் திமுக ஆட்சி நீடித்தது. ஆனால் ஜெயலலிதா பொறுப்பேற்றதும் முதல் ஆண்டிலேயே தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிக்காட்டினார் என பிரச்சாரம் செய்தார்.