கொஞ்சம் கூட அடங்காத திமுக... தேர்தல் ஆணையத்தில் அடுத்தடுத்து குவியும் விதிமீறல் புகார்கள்...!
இந்நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் திமுக மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல்கள் குறித்து கட்சிகள் மீது புகார் கொடுக்கும் படலமும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் திமுக அடுத்தடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் திமுக நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலவு செய்ததாக புகார் அளிகப்பட்டது. திருச்சியில் தி.மு.க நடத்திய பொதுக்கூட்டத்தில் 25 ஆயிரம் கார்கள், பட்டாசுகள், பேனர்கள், பந்தல்கள், உணவகங்கள் ஆகியவற்றுக்கு 200 கோடி ரூபாய் செலவு செய்யப்படிருப்பதால், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவு செய்த தி.மு.க மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வேட்பாளர்களின் செலவு கணக்கில் இத்தொகையை சேர்க்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் திமுக மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வியாபார நிறுவனங்களின் கட்டட முகப்புகளில் திமுக விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பலகைகளை சட்டத்திற்கு எதிராக வைத்துள்ளதாகவும் அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.