AIADMK : இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல்… தேதியை அறிவித்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!!
அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, சசிகலாவின் அறிக்கை அரசியல், ஆளும்கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும், அதிமுகவில் 2வது உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, அதிமுகவை மீட்போம், எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவோம் என சசிகலா அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதால் அதனை தடுக்கும் விதமாகவும், கட்சியில் உண்மையான நிர்வாகிகளை தேர்வு செய்து, கட்சியை கட்டுக்குள் வைக்கும் விதமாகவும் அதிமுக தலைமை முடிவு செய்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி, அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரண்டாம் கட்ட கழக அமைப்புத் தேர்தல்கள் வருகின்ற 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதையொட்டி, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த, ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; நடத்துவதற்கு மட்டும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கழக அமைப்புத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் (கழக உறுப்பினர்கள்), மினிட் புத்தகம், விண்ணப்பப் படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் அவற்றைப் பெற்று, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கி, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத் தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில், மாவட்டத் தேர்தல்பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.