அசோக் சவானை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை....ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கு
ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கும் ஆதர்ஷ் குடியிருப்பு திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானிடம் விசாரணை நடத்த மாநில ஆளுநர் வித்யாசாகர் அனுமதி அளித்த உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
31 அடுக்கு மாடிகள்
போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடுகட்டித்தரும் ஆதர்ஷ் குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு 31 அடுக்கு மாடிகள் கட்டப்பட்டது.
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக ஒதுக்கவேண்டிய இந்த வீடுகள் அரசியல் வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பலருக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது.
ராஜினாமா
இதையடுத்து அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ்கட்சியை சேர்ந்த அசோக் சவான் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
அவர் மீதான இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முதலமைச்சராக இருந்த அசோக் சவானிடம் விசாரணை நடத்த அன்றைய ஆளுனரிடம் சி.பி.ஐ. அனுமதி கேட்டது.
வித்யாசாகர் ராவ் அனுமதி
ஆனால் அன்றைய ஆளுநரான சங்கரநாராயணன் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.இதனை தொடர்ந்து அசோக் சவான் மீதான விசாரணையை சி.பி.ஐ. கைவிட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவான் மீது வழக்கு தொடர புதிய ஆளுநரிடம் சி.பி.ஐ. அனுமதி கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2016-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்தார்.
ஆளுநரின் உத்தரவுக்கு தடை
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அசோக் சவான் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ,அசோக் சவானிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டதாக கூறி மும்பை உயர் நீதிமன்றம் இவ்வாறு தடை விதித்துள்ளது.
அரசியல் வழக்கு
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் , இந்த வழக்கு அரசியல் ரீதியில் போடப்பட்ட வழக்கு ஆகும் என தெரிவித்தார். நீதி நிலைத்து நிற்பது உறுதி என்பதை இந்த தீர்ப்பு எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ. குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட அனைவரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையில் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கிலும் சி.பி.ஐ. கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் மீதான வழக்கை விசாரிக்க தடை விதிப்பதாக மும்பை உயர்நீதி மன்றம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.