திடீரென வருத்தம் தெரிவித்த குஷ்பு... இனி ஒருபோதும் இப்படி செய்யமாட்டேன் என்றும் குஷ்பு உறுதி..!
மூளை வளர்ச்சி இல்லாத என்ற சொற்றொடரை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, கவனக்குறைவால் செய்ததை இனிமேல் ஒருபோதும் செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னையில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ‘காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி’ என்று காட்டமாக விமர்சித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை ‘மூளை வளர்ச்சி’ இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி நடிகை குஷ்பு விமர்சனம் செய்ததற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. டிசம்பர் 3 என்ற இயக்கமும் குஷ்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்கும்படியும் தெரிவித்தது.
இதற்கிடையே இந்தப் பேச்சு தொடர்பாக குஷ்புக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஆழ்ந்த துயரம், வேதனை, அவசரத்தின் ஒரு கணத்தில் இரு சொற்றொடர்களை தவறாக பயன்படுத்தி விட்டேன். கவனக்குறைவால் செய்ததை இனிமேல் ஒருபோதும் செய்யமாட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.