நடிகர் சங்க போராட்டத்தில் சத்யராஜ் ஆவேச பேச்சு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள் என்றும் இல்லையேல் ஒளிந்து கொள்ளுங்கள் என்றும் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்
நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரியும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒட்டு மொத்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்ட மௌன அறவழி போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களான, ரஜினி, கமல், இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து விஜய், சூர்யா, தனுஷ் உட்பட பலர் கலந்துக்கொண்டு விவசாயத்தைக் காப்பாற்ற அவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கிட்டதட்ட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் நடிகையர்கள் இதில் கலந்துக்கொண்டனர். இந்த அறவழி மௌன போராட்டம் இன்று காலை சரியாக காலை 9-க்கு துவங்கியது. போராட்டம் தொடங்கியது முதல் ஒவ்வொரு நடிகர்களும் வர துவங்கினர்.
பல பிரபலங்கள் கலந்துக்கொண்ட இந்த போராட்டம் சரியாக 1 மணியளவில் முடிவடைந்தது. ஆனால் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட நடிகர்கள், ஒரு சில காரணங்களால் போராட்டம் முடிவதற்கு முன்பே புறப்பட்டனர்.
இந்த போராட்டத்தின்போது நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது.
2. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.
3. அரசியலற்ற பொது நோக்கத்தில் காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும்.
4. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம். குரல் கொடுக்க தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லையேல், ஒளிந்து கொள்ளுங்கள். நாம் என்றுமே தமிழர்களின் பக்கம். தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார்.