எடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன நடிகர் சூர்யா... ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்பு..!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நடப்பு கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்...” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலைகள் செய்துகொள்வதால், நடிகர் சூர்யா மத்திய அரசைக் கண்டித்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும் அனைத்து கட்சியினருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.