ஹெச்.ராஜாவின் பேச்சு காட்டுமிராண்டித்தனம்! நடிகர் ரஜினிகாந்த்
பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்தும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்னர் புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. அதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் இன்று லெனின் சிலை... நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை என்று பதிவிட்டிருந்தார்.
ஹெச்.ராஜாவின் இந்த பதிவுக்கு மிகப்பெரிய கண்டனம் எழுந்தது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பெரியார்வழி தொடருவோரும் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடபட்டனர்.
ஹெச்.ராஜாவின் பதிவைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை நேற்று பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது.ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு வகையில் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அந்த பத்வை நீக்கினார். அது குறித்து சில விளக்கங்களும் அவர் கொடுத்திருந்தார்...!
ஹெச்.ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து கடந்த இரண்டு நாளாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் போது, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்தும், அவரின் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராட்ணடித்தனமான செயல் என்று கூறினார்.