ரஜினியும் நானும் சேர்வது தேவையா? கமல் யோசனை!
தனக்கு ஏற்படும் அரசியல் சந்தேகங்களை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்த்து வைக்கிறார் என்றும் ரஜினியும் நானும் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்றும் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
இது குறித்து கமல் ஹாசன் பேசியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை.
எனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சந்தேகங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்த்து வைக்கிறார். போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக்காக அறிஞர்கள், விஞ்ஞானிகளை நாடப்போகிறேன்.
ரஜினியும், நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும்.
ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும். ரஜினியும் நானும் சேர்வது என்பது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.