கமலின் அரசியல் பயணத்துக்கு பொன்னார் போடும் முட்டுக்கட்டை!
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் அவரது அரசியல் பயணத்தை தொடரக் கூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ள நடிகர் கமல் ஹாசன், வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, ஆதரவு திரட்டுவது, மக்களிடம் தனது திட்டங்கள் குறித்து விளக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நடிகர் கமல் ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு என சந்தித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டம் சென்ற கமல், ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்துள்ளார்.
இது குறித்து கமல் பேசும்போது, அரசியல் பயணத்தை தொடங்குவது தொடர்பாக எனக்கு பிடித்தமான நபர்களை சந்தித்து தெரிவித்து வருகிறேன். அந்த வகையில் ரஜினியை சந்தித்து, இது குறித்து தெரிவித்ததோடு, அழைப்பும் விடுத்தேன். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்றும் நட்பு
ரீதியான சந்திப்பு மட்டுமே எனவும் கமல் விளக்கமளித்தார். அரசியல் ரீதியாக இருவரது கருத்தும் வேறாக இருந்தாலும் அது அரசியல். இது நட்பு என கமல் விளக்கமளித்தார். நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பயணம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் கமல் ஹாசனுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கப் போவதாக அறிந்தேன். கலாம் இல்லத்தில் இருந்து, அவர் (கமல்) அரசியல் பயணம் தொடங்கக் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அப்துல் கலாம் அரசியல் சார்பற்றவர்; அரசியல் கட்சிகளுக்க அப்பாற்பட்டு இந்தியாவுக்காக கனவு கண்டவர்; எந்த அரசியலுக்குள்ளும் அவரை அடைத்து விடலாகாது.
எனவே, நடிகர் கமல் ஹாசன், ராமேஸ்வரத்தின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பயணத்தை தொடங்கட்டும் என்றார். அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தலாம், அதில் தவறு இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.