Actor Kamal denounces Vijayendrar
தியானம் செய்வது கடமை என்றால், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்பதும் கடமைதான் என்று நடிகர் கமல் ஹாசன், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் - சமஸ்கிருதம் அகாராதியை, ஹெச். ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான அரிகரன் எழுதியது. நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உட்பட அனைவரும் நின்றிருந்த நிலையில், விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காந்திய மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் என்று கூறியுள்ளார்.
.jpg)
ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்ததாக கூறி கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது நாற்காலியில் விஜயேந்திரர் அமர்ந்திருந்தது குறித்து, வைரமுத்து டுவிட்டர் ஒன்றில் பதிவிட்டுள்ளார். அதில், தேசிய கீதம் என்பது தாய் நாட்டை மதிப்பது; தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது; இரண்டும் சம அளவில்
மதிக்கப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், செய்தியாளர்களைச் சந்திப்பின்போது, விஜயேந்திரர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை; தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை. தியானம் செய்வது கடமை என்றால் எழுந்து நிற்பதும் கடமைதான் என்று விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கமல் பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மற்றும் காஞ்சி சங்கரமடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
