சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அமைச்சர் தங்கம் தென்னரசு.
சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து சிமெண்ட் விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சென்னை, கோவைக்கு இணையாக மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றமான போரம் (Forum)அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் அதே சலுகைகளை தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கினாலும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது.
கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வியாழக்கிழமை முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி கொற்கை, சிவகளை, ஆதிச்ச நல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசித்து சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.