நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை... அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!
தொடர்ந்து பல தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் தொழிலில் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். பலருக்கு வேலை போய்விட்டது. இந்த நிலையில், அன்றாட வாழ்க்கையின் பல அத்தியாவசிய செலவுகளை கூட செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
கல்வி என்பது மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கிய விஷயமாகும். எனினும், சில பள்ளிகள் கட்டணம் என்னும் பெயரில் இந்த கொரோனா காலத்திலும் பெற்றோர்களுக்கு அழுத்தம் அளித்து வருகின்றன. இது குறித்த பல குற்றச்சாட்டுகள் எழவே, இதற்கான ஒரு அறிவுறுத்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், நான்கு நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தொடர்ந்து பல தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.