இந்தியாவில் வேகமெடுத்த வைரஸ் தொற்று.. நோய்த்தொற்று விகிதம் 3.8 சதவீதமாக உயர்வு.. அலறும் உலக நாடுகள்.
கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்று விகிதம் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 26, 291 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. பலமாதகால போராட்டத்திற்குப் பின்னர், பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இரவு பகல் பாராமல் விஞ்ஞானத்தில் அயராது உழைத்ததன் விளைவாக தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா வைரஸ் பதிவாகி வருகிறது. தற்போது நாட்டில் வைரஸ் தொற்று விகிதம் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 25,320 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவாகியுள்ளது. சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை (இன்று) வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் 26,291 புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1.13 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 118 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,58,775 பேர் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களில் அதிகபட்சமான வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 20 அன்று 26,624 புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தன. தற்போது வைரஸ் தொற்று அதிகரிப்பு மற்றும் குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றின் காரணமாக நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது செயலில் உள்ள நோயாளிகளிட் எண்ணிக்கை திங்கட்கிழமை தகவலின்படி 2,19,262 ஆக பதிவாகி உள்ளது. அதாவது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையாக இது உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 17,455 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். அதேபோல் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 552 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 96.63 சதவீதமாக உள்ளது, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் சதவீதம் 1.92 ஆக உள்ளது, இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது, நோய்த்தொற்று விகிதம் 3.73 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 72 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மார்ச் 14 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 22, 74, 07, 413 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.