தமிழக அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. முதலமைச்சருக்கு பின்னர் பதவியேற்ற திண்டுக்கல் சீனிவாசன் பேரை சொல்லி கடகடவென்று அடுத்த உறுதிமொழிக்கு போக, அவரை கையை பிடித்து செங்கோட்டையன் தடுத்து நிறுத்த, சபையில் உள்ளவர்கள் இதைபார்த்து சிரித்தனர்.
அமைச்சரவை பதவி ஏற்றபோது எடப்பாடி பதவி ஏற்ற பின்னர் நேரம் கருதி எட்டு எட்டு அமைச்சர்களாக பதவி ஏற்றனர். வரிசையாக நின்ற அமைச்சர்கள் கவர்னர் ‘நான்’ என்று சொன்னவுடன் அவரவர்கள் பெயரை சொல்ல வேண்டும். பின்னர், இந்திய அரசியலமைப்பின்பால் என்று அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

அடுத்து பக்கத்தில் நின்றிருந்த செங்கோட்டையன் அவர் பெயரை சொல்ல வேண்டும். பின்னர் அடுத்தடுத்து எட்டு அமைச்சர்களும் பெயரை சொல்லி முடித்தபின் உறுதிமொழியை ஏற்பார்கள்.
ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் திண்டுக்கல் சீனிவாசன் உறுதிமொழியை படிக்க ஆரம்பித்தவுடன் திடுக்கிட்டு போன செங்கோட்டையன் அவரது கையை பிடித்து இழுத்து நிறுத்தினார்.
அதன்பின்னர், ஒவ்வொருவராக பெயரை படிக்க உறுதிமொழி ஏற்பு நடந்தது. இந்நிகழ்ச்சியை கவர்னர் முதல் அனைவரும் பார்த்து சிரித்தனர்.
இதேபோல், ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கபட்டு பதவி பறிபோன நேரத்தில் பதவியேற்ற ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் அழுதுகொண்டே பதவியேற்றனர்.
இதைபார்த்து பின்னால் வந்த அமைச்சர்களும் அழுகை வராவிட்டாலும் அழுவது போல் பாவனை காண்பித்து பதவி ஏற்றனர்.
இந்த முறை ஜெயலலிதா இல்லாவிட்டாலும் இவர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளும் பொதுச்செயலாளர் சசிகலா நேற்றுதான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பதவி ஏற்கும் போது கடந்த முறை அழுவது போல் அமைச்சர்கள் அழுதுகொண்டே பதவி ஏற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அனைவரும் சிரித்து கொண்டு சந்தோசமாக பதவி ஏற்றனர்.
இதை கடந்தமுறை நிகழ்வோடு ஒப்பிட்டு சிலர் கமென்ட் அடிகின்றனர்.
