About ADMK symbol issues - police extension to Sukhash
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திராவுக்கு ஜூலை 25 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவித்த போது ஒ.பி.எஸ் அணியும், சசிகலா அணியும் தங்களுக்கு பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை தரக்கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. மேலும் இரு அணிகளுக்கு வெவ்வேறு சின்னங்களை வழங்கியது. தொடர்ந்து பணபட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்தானது.
இதையடுத்து இரட்டை இலையை பெற டிடிவி.தினகரன், இடை தரகர் சுகேஷ் சந்திரா மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, 2 பேரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் டிடிவி தினகரன் வெளியே வந்தார். இதுகுறித்த வழக்கு டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சுகேஷ் சந்திராவின் காவலை ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
