மோடிதான் மீண்டும் பிரதமர்… நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளை வெல்லும்!! அடித்துக் கூறும் ஏபிபி சர்வே …
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளை கைப்பற்றும் என ஏபிபி ஹிந்தி டிவி சேனலின் 'தேசத்தின் மனநிலை' என்ற சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்றும் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் என மோடி ஆட்சியில் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால் பாஜகவின் செல்வாக்கு சரிந்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஏபிபி நிறுவனம் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் அரசியல் நோக்கர்களின் கருத்துக்கு மாறாக பாஜக கூட்டணி 300 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம்
உ.பியில் வலுவான கூட்டணி அமைக்கும் கட்சிக்கு 44 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற தெரிவித்திருந்தாலும், பாஜக கூட்டணிக்கு 31 இடங்கள் கிடைக்கும் என்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்களே கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் உ.பி.யில் மகா கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் பாஜக கூட்டணிக்கு 70 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜுக்கு தலா 4 தொகுதிகள் கிடைக்கும் என தெரிகிறது.
மகாராஷ்ட்ரா
மகாராஷ்டிராவிலுள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14, சிவசேனா 5, தேசியவாத காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
பீகார்
பீகாரில் 34 லோக்சபா தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என்றும்,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 4 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என தெரிய வருகிறது
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு 22 இடங்கள் கிடைக்கும் என்றும் மொத்தமுள்ள 29 இடங்களில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வெல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
25 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் பாஜக கூட்டணி 17 தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு 8 சீட்தான் கிடைக்கும் என்றும் ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜி அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 9 தொகுதிகள் கிடைக்கும் என்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரசுக்கு 1 தொகுதிதான் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக சற்று வீக்காகவே உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 116 தொகுதிகள் கிடைக்கும் என்றும்,
மூன்றாவது அணிக்கு அதாவது பிற கட்சிளுக்கு 127 தொகுதிகள் கிடைக்கும் என ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது. இந்த சர்வேயின் படி பார்த்தால் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே தெரிகிறது