கஸ்தூரி ஒரு டவுட்! நீங்க கிரண்பேடியை நீங்க புகழ்றீங்களா இல்ல அவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறீர்களா?
புதுச்சேரி கவர்னர், கிரண்பேடி பதவி ஏற்ற நாளில் இருந்து தன்னுடைய மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக கூறுபவர். இதற்காக சில விமர்சனங்கள் எழுந்தாலும் அது குறித்து அவர் சற்றும் கண்டு கொள்ளாமல், தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்வார்.
இந்நிலையில் தமிழக அரசியல், குறித்து இவர் போட்ட ட்விட் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது "தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த கிரண்பேடி, "மோசமான அரசின் செயல்பாடு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு, துணிவற்ற மக்கள், அவர்களின் கோழைத்தனமும் சுயநலமும் தான் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம்'' என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். மேலும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும், கிரண்பேடிக்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, கிரண்பேடியின் இந்த ட்விட்டருக்கு ஆதரவு கொடுப்பது போல் பின் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி போட்ட ட்விட்டில், "கிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. அவங்க சொன்னது புதுசுமில்லை, பொய்யுமில்லை. நாம நமக்குள்ள தினமும் புலம்புறதுதான். உண்மையை போட்டு உடைச்சிட்டாங்களென்ற கோவத்தைவிட உள்ளூர் மானத்தை ஊரான் கப்பல்ல ஏத்திட்டாங்கன்ற அவமானம்தான் இப்போ எல்லாருக்கும் என்று மறைமுகமாக பாராட்டிய கஸ்தூரி அதன்பின்னர், 'ஆனா ஒண்ணு, சுயநலமிக்க, சக்தியில்லாத மக்கள்னு ஒட்டுமொத்தமா தமிழர்களை சொல்லக்கூடாது. ஒருவேளை அவங்களுக்கு தெரிஞ்ச தமிழ் ஆளுங்க அப்பிடித்தான் போலருக்கு. எவ்வளவோ கஷ்டத்துலையும் மனிதாபிமானத்தை விட்டு கொடுக்காத மக்களைத்தான் நான் நெறைய பாத்துருக்கேன். நரி வலம் போனா என்ன, இடம் போனா என்ன, நமக்கெதுக்கு வம்புன்னு காலம் காலமா கண்ணை மூடிக்கிட்டு இருக்கிற நம்ம பாழாப்போன சகிப்புத்தன்மையை சுயநலம்னும் பொறுமையை பலவீனம்னும் அவங்க தவறா மதிப்பிட்டுருக்காங்கன்னு தோணுது. எதிரிக்குகூட மரியாதை குடுத்து பேசறது தமிழர் நாகரிகம். அதற்கு பெயர் பண்பு; பயமில்லை." என்று பதிவு செய்துள்ளார்.
இதில் ஆரம்பத்தில் கிரண்பேடியை புகழ்வது போல் துவங்கி இறுதியில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் கஸ்தூரி.