a mysterious postcard against ops and ttv
ஆர்.கே.நகர் இடை தேர்தலில் தினகரன் தரப்பும், பன்னீர் தரப்பும் தீயாக வேலை செய்து வரும் நிலையில், வருமான வரி சோதனை, தினகரன் தர்ப்பை மட்டும் டென்ஷனாக்கியது.
ஆனால் தொகுதி முழுவதும் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு வந்து சேர்ந்த போஸ்ட் கார்டும், அதில் எழுதப்பட்ட வாசகமும், பன்னீர், தினகரன் இரு தரப்பையும் டென்ஷனாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
அம்மாவை கொன்ற துரோகிகளான, தினகரன், மதுசூதனன் ஆகிய இரண்டு போரையும் தோற்கடியுங்கள், என்ற வாசகம் எழுதப்பட்ட அந்த கடிதம்தான் தொகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்.

தொகுதியில் உள்ள ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் வந்துள்ள, ஒரே மாதிரியான வாசகங்கள் எழுதப்பட்ட, அந்த கடிதங்கள் அனைத்தையும் டெலிவரி செய்வதற்குள் தபால் காரர்களுக்கு போதும், போதும் என்று ஆகி இருக்கிறது.
அந்த கடிதங்களை, ஒரே இடத்தில் இருந்து அனுப்பாமல் பல மாவட்டங்களில் இருந்தும் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால், இது யார் செய்த வேலையாக இருக்கும்? என்று யாராலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்கிறார்கள்.
இந்த கடிதம், கிட்டத்தட்ட அனைவருக்கும் போய் சேர்ந்துள்ளதால், உனக்கு வந்ததா? எனக்கும் வந்தது என்று அனைவரும் பேசி கொள்கிறார்களாம்.

இந்த வேலையை திமுக செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்புமே நினைக்கிறதாம்.
ஆகவே, தீபா பேரவையை சேர்ந்த யாராவது செய்திருக்கக் கூடும் என்றே சந்தேகப்படுவதாக தகவல்.
