A little bit to stick to it will not be an IPL game by BHARADIRAJA

கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தும் மத்திய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாத தால் தமிழகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதனால், எல்லோரும் போராட்டத்தைக் கைவிட்டு கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பி விடுவார்கள் என்று நினைத்து ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இயக்குநர் பாரதிராஜாவும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஒத்திவைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் இனத்தை அழித்தார்கள்; நாம் எதுவும் பேசவில்லை. நம் மொழியைச் சிதைக்கிறார்கள்; நாம் மௌனமாக இருக்கிறோம். நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும், போராடாமலே இருக்கிறோம். உறைந்து போய்க் கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு, நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும்போது, ஐபிஎல் எனும் மாய உலகத்துக்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசிய புரட்சிக்கு தீ வைக்கும், முட்டாள்தனமான விளையாட்டை நிராகரிப்போம்.

தமிழ் மக்களின் ஒற்றுமை கரு, கூடிவரும்போது, கருக்கலைப்பு செய்யவரும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தடை விதிப்போம். தமிழா! ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம். தமிழனை விளையாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் எங்கள் தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். இது எச்சரிக்கை அல்ல. அன்பு சுற்றறிக்கை” என்று கவிதை வடிவில் குறிப்பிட்டிருப்பதுடன்,

“உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது. மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் களம் காணுவார்கள் என்பதைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.