கடந்த 20 ஆண்டுகளில் 400 பேரை பலி வாங்கிய பட்டாசு ஆலை விபத்து. என்று ஓயும் இந்த துயரம்.. கதறும் சீமான்.
கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பட்டாசு வெடி விபத்துகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் இக்கொடுந்துயரம் இன்றுவரை நீண்டுகொண்டே வருகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பட்டாசு வெடி விபத்துகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் இக்கொடுந்துயரம் இன்றுவரை நீண்டுகொண்டே வருகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு ஆலை விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.
இதுபோன்ற வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான மாற்றுத்தொழில் ஏற்பாடுகளைச் விரைந்து செய்துதர வேண்டுமெனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.