நாளை சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1, 728 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோல செய்தியாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், எம்.எல்.ஏ-வின் உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.