இன்னும் ஒரு வாரத்தில் தொற்று இல்லா தமிழகம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை..!
ஒரு மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும்.கொரோனா 3-வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளோம்.
விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சவாலானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று சொல்லவில்லை. இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், மாவட்டம்தோறும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும்.
கொரோனா 3-வது அலையின்போது 2 லட்சம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை வரும் என கணக்கிடுகிறார்கள். எனவே அரசு கூடுதலாக படுக்கைகளை உருவாக்க வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்தாகும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் நிலைப்பாடு என்ன என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- இந்த அரசு கடந்த மாதம் 7-ம் தேதி பதவி ஏற்கும்போது கொரோனா தொற்று 26,468 ஆக இருந்தது. 10 நாளில் 36 ,184 ஆக உயர்ந்தது. முதல்வர் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற அன்றே பிரதமருக்கு கடிதம் எழுதினார். பின்னர் பிரதமரிடம் நேரடியாகவும் பேசினார். கடந்த 17-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். தமிழகத்தில் தடுப்பூசி மையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தினார்.
முதல்வர் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 7,427 என்ற அளவுக்கு வேகமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாளில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்படும். தடுப்பூசியை பொறுத்தவரை அடுத்த மாதம் 71 லட்சம் தருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும். கொரோனா 3-வது அலை வரக்கூடாது என நினைக்கிறோம். அப்படியே வந்தாலும் அதை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.