'45 வருசமா தலைவர் பதவியில் நாங்க மட்டும் தான்'..! மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறும் 92 வயது மூதாட்டி..!
தனது கணவர் ஊராட்சி மன்ற தலைவராக 4 முறை பணியாற்றியதாகவும், மகன் பார்த்தசாரதி 20 வருடங்கள் தலைவராக இருந்ததாகவும், 2001 முதல் 2006 வரை அவர் தலைவர் பதவி வகித்ததாகவும் கனகவள்ளி கூறியிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 90 வயது மூதாட்டி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செய்தி வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி. தற்போது இவருக்கு 92 வயது ஆகிறது. நடைபெற இருக்கும் ஊரக பதவிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் தனது மகன்,மருமகள்,குடும்பத்தினர், நண்பர்கள், ஊர் மக்கள் என அனைவருடனும் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது தனது கணவர் ஊராட்சி மன்ற தலைவராக 4 முறை பணியாற்றியதாகவும், மகன் பார்த்தசாரதி 20 வருடங்கள் தலைவராக இருந்ததாகவும், 2001 முதல் 2006 வரை அவர் தலைவர் பதவி வகித்ததாகவும் கூறியிருக்கிறார். சுமார் 45 வருடங்களாக அவரது குடும்பம் மட்டுமே ஊராட்சி தலைவராக இருப்பதாகவும் தற்போதும் ஊர் மக்கள் ஆதரவுடன் தங்கள் குடும்பத்தின் ஒருவரே தலைவராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கனகவள்ளியின் மருமகள் புஷ்பா(52) தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு நிராகரிப்பட்டால் கனகவள்ளி போட்டியிட ஏதுவாக அவரும் மனுதாக்கல் செய்திருந்தார். இருவரது வேட்புமனுவும் ஏற்கப்பட நிலையில், மருமகளுக்காக கனகவள்ளி, தனது மனுவை வாபஸ் வாங்க இருக்கிறார்.